THIRUVAZHMUDI EESWARAR SAMEDHA THIRIBURA SUNDHARAMBIGAI
Friday 20 November 2020
உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்
உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்
Thiruvarutpayan of Umapathi Sivachariyar
அன்பர்களே,
சைவ சித்தாந்தக் கருத்துக்களை எளிதில் மக்கள் உணரும் வகையில் உமாபதி சிவம் அருளிய நூலே குறள் வெண்பாவால் இயன்ற "திருவருட்பயன்" எனும் இந்நூலாகும். சைவ பெருமக்களால் பெரிதும் பயிலப்படும் நூற்களில் இதுவும் ஒன்றாகும். இதற்கு பண்டே பல உரைகள் தோன்றியுள்ளன, இன்றும் தோன்றிக் கொண்டிருகின்றன. இங்கு மூலத்தை மாத்திரம் தருகின்றேன். பத்துப் பத்தாக மொத்தம் 100 குறள்கள்.
அன்பன் கி.லோகநாதன்
கணபதி வணக்கம்
நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்.
1. பதிமுது நிலை
அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து. 1
தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னம் இலான் எங்கள் பிரான். 2
பெருமைக்கும் நுண்மைக்கும் பேர்அருட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்புஇன்மை யான். 3
ஆக்கிஎவையும் அளித்து ஆசுடன் அடங்கப்
போக்கு அவன் போகாப் புகல் . 4.
அருவம் உருவம் அறிஞர்க்கு அறிவாம்
உருவம் உடையான் உளன். 5.
பல்ஆர் உயிர் உணரும் பான்மைஎன மேல்ஒருவன்
இல்லாதான் எங்கள் இறை. 6.
ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வான்நாடர் காணாத மன். 7
எங்கும் எவையும் எரி உறு நீர்போல் ஏகம்
தங்கும்அவன் தானே தனி. 8.
நலம்இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலம்இலன் பேர் சங்கரன். 9.
உன்னும்உளது ஐயம்இலது உணர்வாய் ஓவாது
மன்னுபவம் தீர்க்கும் மருந்து 10.
திருவருட்பயன் -இரண்டாம் பத்து
2. உயிரவை நிலை
பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை. 11.
திரிமலத்தார் ஒன்றுஅதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தார் ஆயும் உளர். 12
மூன்றுதிறத்து உள்ளாரும் மூலமலத்து உள்ளார்கள்
தோன்றலர்தொத்து உள்ளார் துணை. 13
கண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும்
திண்திறலுக்கு என்னோ செயல் . 14
பொறிஇன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு
அறிவுஎன்ற பேர்நன்று அற. 15
ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவு இல்எனில் என்செய. 16
சத்துஅசத்தைச் சாராது அசத்துஅறியாது அங்கண்இவை
உய்த்தல் சத்சத்தாம் உயிர். 17
இருளில் இருளாகி எல்இடத்தில் எல்லாம்
பொருள்கள் இலதோ புவி. 18
ஊமக்கண் போல ஒளியும் மிக இருளே
யாம்மன்கண் காணா தவை. 19
அன்றுஅளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள்தெரிவது
என்றுஅளவு ஒன்றுஇல்லா இடர். 20
திருவருட்பயன் - மூன்றாம் பத்து
3. இருள்மல நிலை
துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப்பொருளும்
இன்றென்பது எவ்வாறும் இல். 21
இருளானது அன்றி இலதெவையும் ஏகப்
பொருளாகி நிற்கும் பொருள். 22
ஒருபொருளும் காட்டாது இருளுருவம் காட்டும்
இருபொருளும் காட்டாது இது. 23
அன்றுஅளவி உள்ளளியோடு ஆவி இடைஅடங்கி
இன்றளவும் நின்றது இருள். 24
பலரைப் புணர்ந்தும் இருள்பாவைக்கு உண்டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு. 25
பன்மொழிகள் என்உணரும் பான்மை தெரியாத
தனமை இருளார் தந்தது. 26
இருள்இன்றேல் துன்புஎன் உயிர் இயல்பேல் போக்கும்
பொருள் உண்டேல் ஒன்றாகப் போம். 27
ஆசுஆதியேல் அணைவ காரணமென் முத்திநிலை
பேசாது அகவும் பிணி. 28
ஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம்
என்றும் அகலாது இருள். 29
விடிவாம் அளவும் விளக்கனைய மாயை
வடிவுஆதி கன்மத்து வந்து. 30
திருவருட்பயன் - நான்காம் பத்து
4. அருளது நிலை
அருளில் பெரியது அகிலத்தில் வேண்டும்
பொருளில் தலைஇலது போல். 31
பெருக்க ஒளியினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள். 32
ஊனறியாது என்றும் உயிர்அறியாது ஒன்றுமிவை
தானறியாதார் அறிவார் தான். 33
பால்ஆழி மீன்ஆளும் பான்மைத்து அருளுயிர்கள்
மால்ஆழி ஆளும் மறித்து. 34
அணுகும் துணைஅறியா ஆற்றோனில் ஐந்தும்
உணர்வை உணராது உயிர். 35
தரையை அறியாது தாமே திரிவோர்
புரையை உணரார் புவி. 36
மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெட்த்தோர் ஞானம்
தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். 37
வெள்ளத்துள் நாவாற்றி எங்கும்விடிந்து இருளாம்
கள்ளத் தலைவர் கடன். 38
பரப்புஅமைந்து கேண்மின்இது பாலல்கலன்மேல் பூஞை
கரப்பு அருந்த நாடும் கடன். 39
இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமிலா
வெற்று உயிர்க்கு வீடு மிகை. 40
திருவருட்பயன் -ஐந்தாம் பத்து
5. அருள் உரு நிலை
அறியாமை உள்நின்று அளித்ததே காணும்
குறியாக நீங்காத கோ. 41
அகத்துறு நோய்க்கு உள்ளினரை அன்றிஅதனை
சகத்தவரும் காண்பரோ தான். 42
அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருள்ஆர் அறிவார் புவி. 43
பொய்இருண்ட சிந்தைப் பொறி இலார் போதமாம்
மெய்இரண்டும் காணார் மிக. 44
பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வைஎனக் காணார் புவி. 45
எமக்குஎன் எவனுக்கு எவை தெரியும் அவ்வத்
தமக்குஅவனை வேண்டத் தவிர். 46
விடம்நகுலம் மேவினும் மெய்ப்பாவகனின் மீளும்
கடனில்இருள் போவதுஇவன் கண். 47
அகலத் தரும் அருளை ஆக்கும் வினைநீக்கும்
சகலர்க்கு வந்துஅருளும் தான். 48
ஆர்அறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும்
பேர்அறிவான் வாராத பின். 49
ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனல்
பானு ஒழியப் படின். 50
திருவருட்பயன் - ஆறாம் பத்து
6. அறியும் நெறி
நீடும் இருவினையும் நேராக நேர்ஆதல்
கூடும் இறைசத்தி கொளல். 51
ஏகன் அநேகன் இருள்கருமம் மாயைஇரண்டு
ஆக இவை ஆறு ஆதி இல். 52
செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்
உய்வான் உளன்என்று உணர். 53
ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தெ ஊனொடு உயிர்
தான் உணர்வொடு ஒன்றாம் தரம். 54
தன்நிறமும் பல்நிறமும் தானாம்கல் தன்மைதரும்
பொன்நிறம்போல் மன்நிறம்இப் பூ. 55
கண்தொல்லை காணும்நெறி கண் உயிர் நாப்பண்நிலை
உண்டுஇல்லை அல்லது ஒளி. 56
புன்செயலி நோடு புலன்செயல்போல் நின்செயலை
மன்செயலது ஆக மதி. 57
ஓராதே ஒன்றையும்உற்று உன்னாதே நீமுந்திப்
பாராதே பார்த்தனைப் பார். 58
களியே மிகுபுலனாய்க் கருதி ஞான
ஒளியே ஒளியாய் ஒளி. 59
கண்டபடியே கண்டு காணாமை காணாமல்
கொண்டபடியே கொண்டு இரு. 60
திருவருட்பயன் -ஏழாம் பத்து
7. உயிர் விளக்கம்
தூநிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல்
தன்அதுவாய் நிற்கும் தரம். 61
தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப்
பித்தத்தில் தான் தவிர்ந்த பின். 62
காண்பான் ஒளி இருளில் காட்டிடவும் தான் கண்ட
வீண்பாவம் எந்நாள் விழும். 63
ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை
தெளிவு தெரியார் செயல். 64
கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க்கு அல்லால்
எடுத்துச் சுமப்பானை இன்று. 65
வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதிகவரத்
துஞ்சினனோ போயினனோ சொல். 66
தனக்குநிழல் இன்றாம் ஒளிகவரும் தம்பம்
எனக்கவர நில்லாது இருள். 67
உற்கைதரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்
நிற்க அருளார் நிலை. 68
ஐம்புலனால் தாம்கண்டது என்றால் அதுவொழிய
ஐம்புலன் ஆர்தாம் ஆர்அதற்கு. 69
தாமே தருபவரைத் தம்வலியினால் கருதல்
ஆமே இவன்ஆர் அதற்கு. 70
திருவருட்பயன் - எட்டாம் பத்து
8. இன்புறு நிலை
இன்புறுவார் துன்பார் இருளில் எழும்சுடரின்
பின்புகுவார் முன்புகுவார் பின். 71
இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம்
ஒருவன் ஒருத்தி உறின். 72
இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம்
இன்பகனம் ஆதலினால் இல். 73
தாடலைபோல் கூடி அவை தான் நிகழா வேற்று இன்பக்
கூடலைநீ ஏகமெனக் கொள். 74
ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஓசைஎழாது
என்றாலும் ஓர் இரண்டும் இல். 75
உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரைஒழியப்
பற்றாரும் அற்றார் பவம். 76
பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி
நீ ஒன்றும் செய்யாது நில். 77
ஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாது
கண்படுப்பார் கைப்பொருள்போல் காண். 78
மூன்றாய தன்மை அவர் தம்மில் மிக முயங்கித்
தோன்றாத இன்பம் அது என் சொல். 79
இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம்
அன்பு நிலையே அது. 80
திருவருட்பயன் - ஒன்பதாம் பத்து
9. ஐந்தெழுத்து அருள் நிலை
அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்
பொருள்நூல் தெரியப் புகின். 81
இறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி
உறநிற்கும் ஓங்காரத்து உள். 82
ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம்
ஞானநடம் தான்நடுவே நாடு. 83
விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம்
பெரியவினை தீரில் பெறும். 84
மால்ஆர் திரோதம் மலம்முதலாய் மாறுமோ
மேலாகி மீளா விடின். 85
ஆராதி ஆதாரம் அந்தோ அதுமீண்டு
பாராதுமேல் ஓதும் பற்று. 86
சிவமுதலே ஆம்ஆறு சேருமேல் தீரும்
பவம் இதுநீ ஓதும் படி. 87
வாசி அருளியவை வாழ்விக்கும் மற்று அதுவே
ஆசுஇல் உருவமும் ஆம் அங்கு. 88
ஆசில்நவா நாப்பண் அடையாது அருளினால்
வாசி இடை நிற்கை வழக்கு. 89
எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து. 90
திருவருட் பயன் - பத்தாம் பத்து
10. அணைந்தோர் தன்மை
ஓங்கு உணர்வின் உள்அடங்கி உள்ளத்துள் இன்புஒடுங்கத்
தூங்குவர்மற்று ஏது உண்டு சொல். 91
ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகம்நுகர்
வெந்தொழிலும் மேவார் மிக. 92
எல்லாம் அறியும் அறிவுஉறினும் ஈங்குஇவர்ஒன்று
அல்லாது அறியார் அற. 93
புலன் அடக்கித் தம்முதல்கண் புக்குறுவார் போதார்
தலம்நடக்கும் ஆமை தக. 94
அவனைஅகன்று எங்குஇன்றாம் ஆங்குஅவனாம் எங்கும்
இவனைஒழிந்து உண்டாதல் இல். 95
உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக்கு
எள்ளும் திறம் ஏதும் இல். 96
உறும்தொழிற்குத் தக்க பயன் உலகம் தத்தம்
வறும்தொழிற்கு வாய்மை பயன். 97
ஏன்ற வினைஉடலொடு ஏகுமிடை ஏறும்வினை
தோன்றில் அருளே சுடும். 98
மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதுஅறிவார்க்கு
அம்மையும் இம்மையே ஆம். 99
கள்ளத்தலைவர் துயர்கருதித் தம்கருணை
வெள்ளத்து அலைவர் மிக. 100
- திருவருட்பயன் முற்றிற்று -
சோணாசல வெண்பா
சோணாசல வெண்பா(சோணாசல முதலியார் )
காப்பு
வாணாளை வீணாளா வையகத்திற் போக்காமற்
சோணாசல வெண்பாச் சொல்லுதற்கு - நாணாளு
மீங்கழுநீ ரானைநினை யேக்கமறக் காக்குமுக்கட
செங்கழுநீ ரானைநினைந் தோது .
நூல்
ஓங்காரப் பீடத் துறையும் பிரானினனைப்
பாங்காரக் காணப் பணித்திடா - யாங்கார
வெம்பிரமா நற்றிருமான் மெய்யதுமாறித் தொடாமா
சம்பிரமா சோணா சலா (1)
கங்கைச் சடையுங் கருணைத் திருமுகமு
மங்கை மழுமாணு மரைக்கசைத்த - பொங்கரவுஞ்
செந்நாளு மெந்நாளுஞ் சேவிக்க மேன்மேலுந்
தந்தாளுஞ் சோணா சலா (2)
எற்றைநாண் மாதுமையோ டென்முன் வருவாயோ
வற்றைநா ணல்லநா ளானநாண - மற்றைநாள்
கன்மநாள் வீணாள் கரிநா னிருட்டுநாள்
சன்மநாள் சோணா சலா (3)
தீவாய்ப் படநாகத் தீண்டினாலுந் துயர்கூர்ந்
தாவாவென் றேங்கியழுங் காம - னாவால்
விடாதார வென்பார்க்கு வெய்யவிட முண்டோ
சடாதரா சோணா சலா (4)
கோயில்வலஞ் செய்யேன் கும்பிட னின்றுருகேன்
வாயிலெழுத் தஞ்சும் வழுத்துகிலே - னாயிற்
கடையாளாப் பேய்போற் கவல்கின்றேன் கங்கைச்
சடையாளா சோணா சலா (5)
மாதேவா சங்கரா மைக்கண்டா முக்கண்ணா
கோதேது மில்லாக் குணாகரா - பூதேசா
வோம்பவா வோம்பவா வுள்ளவா வுள்ளவா
சாம்பவா சோணா சலா (6)
மெய்ந்நூலை விட்டுவிட்டு வேறுவே றுள்ளபல
பொய்ந்நூலைக் கற்றுப்பு லம்புகின்றா - ரென்னோர்க்கும்
பொல்லாவா தைக்குளிர்க்குப் போர்வைவுயா கம்பலமா
சல்லவா சோணா சலா (7)
பிறையிட்ட பொற்சடையெம் பெம்மானே நின்றா
ணிறையிட்ட வன்பா நினைந்து - முறையிட்டுங்
கேளாது போலிருந்தாற் கெட்டேனி னிக்கணமுந்
தாளாது சோணா சலா (8)
வேதாகமந் தெரிந்த மேலோ ருடன்கலந்து
மாதாகமான் புன்றகாண மாண்பினுளப் - போதாகச்
சத்துவா னந்த சகசநிட்டை தந்தருளாய்
தத்துவா சோணா சலா (9)
மண்ணேறு பல்வகையா மன்பதைக ளத்தனையுங்
கண்ணேறு நீங்கிக் களிப்பதற்கோ - புண்ணேறு
சிந்தனையே னென்னையுமோர் சீவனென விவ்வுலகிற்
றந்தனையே சோணா சலா (10)
தண்டா மறையிலைமேற் றண்ணீரா வென்றனுள
மண்டாத் துயரா வலைகின்ற - கண்டாய்
சிலையெழுத்தா வோர்மொழியுஞ் செப்பகிலா யீதென்
றலையெழுத்தா சோணா சலா (11)
பேயுடனே நட்டம் பிரியமுடன் செய்பவனிச்
சேயுடனே சேராதென் செப்புவா - யாயுலக
மாமகண்டா வேதண்டா வண்டரண்டர் வால்முண்ட
சாமகண்டா சோணா சலா (12)
மாயாம லம்புணர்ந்து மாதவமாஞ் சைவநெறித்
தோயாம லம்புவியிற் சோர்கின்றேன் - றாயாகி
வேண்டவர் வின்படியே மெய்ஞ்ஞானப் பால்கொடுப்பாய
தாண்டவர் சோணா சலா (13)
துன்பக் கடல்வீழ்ந்த தொண்டனேன் றன்னைநீ
யின்பக் கடலாட்ட வெண்ணினா - லன்பா
தடுப்பாரோ வைராரோ கம்மியிவ னென்று
தடுப்பாரோ சோணா சலா (14)
தெய்வமுண் டென்றோவேளை தெய்வமின் றென்றோர்வேளை
மைவளருந் துட்டமன மிருந்தா - லுய்வதெவன்
ஈசனானென் றானூர்ந் தீண்டவர் வாணடானீ
தாசனான் சோணா சலா (15)
எத்தனைதான் கற்றென்ன வெத்தனைதான் கேட்டென்ன
வத்தனையு மற்றோர்க் கவர்ந்தென்ன - சித்தந்
தராசனார்க் கல்லாலுன் றாளுண்டோ மேருச
சராசனா சோணா சலா (16)
அன்புவளா தொண்டருள மாலயமா வெப்பொழுதுந்
தென்புவளர் தேவியுடன் சேர்ந்துவளர் - நின்புகழைப்
பாடுவேன் பந்தவினைப் பாசத்தை வேரறவே
சாடுவேன் சோணா சலா (17)
கருநிறத்த காகங் கனகமலை சார்ந்தாற்
றிருநிறத்த வாகுஞ் செயல்போ - லிருநிறத்த
வாகாரநா னுனைச்சார்ந் தன்பனாவேன் கருணா
சாகரா சோணா சலா (18)
வன்பா தகஞ்செய்யும் வஞ்சர்தமைச் சேராம
னின்பா தகஞ்ச நினைத்துவா - ழன்பா
நிதானந்தா மந்தாகினிக் குவந்தா யெந்தாய
சதானந்தா சோணா சலா (19)
மான்செய்த கண்ணியொடும் வால்வடி வேலனொடும்
வான்செய்த காட்சி வழங்கென்றால் - யான்செய்த
கன்மமா வந்துமுகங் காட்டகிலா யீதுனக்குத்
தன்மமா சோணா சலா (20)
வெய்யபிறப் பீனுமுயர் வித்தாகு மாசையென
வுய்யநல்லோர் சொற்றறி நெறியோராயன் - மையலிலே
யாழ்கின்றே னின்சீரரு ளெள்ளளவுமின்றித்
தாழ்கின்றேன் சோணா சலா (21)
முற்றா விளஞ்சேய்க்கு மூண்டநோய்க் காமருந்து
பெற்றா ளருந்துகின்ற பெற்றிபோற் - சிற்றம்
பலசதுவந்த மன்பதைக் காப்பார நடஞ்செய்தித்
தலத்துவந்த சோணா சலா (22)
ஆட்டுகின்றா யாடுகின்றா யாடலையுங் காண்கின்றாய்
கூட்டுகின்றாய் கூடுகின்றாய் கொள்கைபல - நாட்டுகின்றாய்
ஞாலமெலா மிவ்வகையே நானறியே னின்னுடைய
சாலமெலாஞ் சோணா சலா (23)
என்னைப்போ லேழையிலை யெவ்வெவ் வுலகத்து
நின்னைப்போல் வள்ளலிலை நிச்சயமே - பின்னையே
யென்றொழிலே யாசித்த தில்லையெனா தீவதுநின்
றன்றொழிலே சோணா சலா (24)
நறும்பூவுடன் சேர்ந்த நாருமண மெய்து
மிறும்பூ தன்றைய வெளியேன் - பெறும்பே
றதுவே தானாக வடியருடன் சேர்வேன்
சதுவேதா சோணா சலா (25)
பத்தருக்குஞ் சித்தருக்கும் பண்ணவர்க்கும் விண்ணவர்க்கு
முத்தருக்கு மற்றவர்க்கு மூவரெனுங் - கத்தருக்கு
நற்றுரையாய் வாழ்கின்றாய் நாயேற்கு நாயகனா
சற்றுரையாய் சோணா சலா (26)
வணங்காத் தலையும் வழுத்தாத நாவு
மிணங்கா மனமு மெனக்கே - யணங்கா
மிகுதியா வின்னம விளம்புவதே னந்தோ
தகுதியா சோணா சலா (27)
என்னேநீ ராடப்போ யெண்ணமறந் தொருவன்
பின்னேசே றாடுகின்ற பெற்றிபோற் - கொன்னேவெங்
கன்மத்தைச் செய்து கழிக்கின்றே னல்லநர
சன்மத்தைச் சோணா சலா (28)
அண்ணா மலையென்று மண்டமெலாம் பெற்றெடுத்த
வுண்ணா முலையென்று முள்ளத்தே - யெண்ணாத
நாளில்லை நாயேற்கு னற்றாள லாதடையுந்
தாளில்லை சோணா சலா (29)
இலவுதனைக் காத்தே யிருக்குங் கிளிபோற்
குலவுகுடும் பத்தையே கோரி - விலகினேன்
மாதுரியா னந்தசுகம் வாய்க்குமோ வேழைக்குச்
சாதுரியா சோணா சலா (30)
நாட்டைவிட்டுக் காட்டையுற்று நற்கனிதேரோர் சிறுவன்
வேட்டையிற்றப் புங்கொடிய வேங்கைகண்டு - கோட்டை
யரண்புகுந்தே யுய்ந்ததென யானுய்ய நின்பூஞ்
சரண்புகுந்தேன் சோணா சலா (31)
வானே முகவட்ட மாமூர்த்தி யாவிளங்கும்
கோனே நினதுபதங் கூடாமல் - யானே
தனித்தேனோ விளங்குத் தளரலிதற கென்றே
சனித்தேனோ சோணா சலா (32)
தேவாரந் தன்னைச் சிரத்தையா நாயடியே
னாவாரப் பயந்து விழிக - கோவாரக
கன்னிகரு முள்ளங் களித்துருகும் வாழ்வருளாய
தன்னிகருஞ் சோணா சலா (33)
ஞாயிறு திங்கண யனஞ்செவ் வாயுமைமெய்
மேயபுத னின்மெய் வியாழமுறை - வாய
தனியா மோர்வெற் புதழை வெள்ளியற்குச்
சனியாமோ சோணா சலா (34)
பெண்ணாசை யாதியாப் பேசுகின்ற மூவாசை
யெண்ணாசை வையகத்தி லேறகாதோ - அண்ணா
மலையானே கொண்டவர் யார்மற் றாசைதம்மிற்
றலையானே சோணா சலா (35)
ஓர்தனிரு தாண்முமல மோவுறவே நாற்கரணஞ்
சேர்தரவஞ் சக்கரமுஞ் சிந்தித்தா - றார்பொழுது
மேழுவேதத் திசையி னேத்தரு ளெட்டங்கமுறத்
தாழுவேள் சோணா சலா (36)
காலத்தே சென்றுசிவ கங்கையிலே நீராடிப்
பாலத்தே நீற்றைப் பரிந்தணிந்து - மூலமர
மந்திரமே யோதிநினை மன்னிவலஞ் செய்வதுய்யுந்
தந்திரமே சோணா சலா (37)
நின்னைச் சதமா நினைக்குஞ் சிறியேற்கும்
பின்னை வுறுமைப் பிணியுண்டோ - பொன்னைச்
சதாசிவா வென்றழைக்குந் தோகைபுணர் சாம்ப
சதாசிவா சோணா சலா (38)
உடல்பொரு ளோடாவி யுனக்கே யளித்தேன்
கடலுகங் காணவெனைக் காவர் - தடலுடனே
யிங்கடத்தை நீபுரிந்தா லேவாபாற கூறுவனென
சங்கடத்தைச் சோணா சலா (39)
தன்னிகரில் சோண சயிலனே யென்பாச
சொன்னிகழ் பாமாலையன்று சூட்டினருக - கிந்நிலத்தின்
முன்மானன் றெட்டரிய முண்டகத்தா ளன்றியுண்டோ
சன்மானஞ் சோணா சலா (40)
வாக்கின் வருகவென்றால் வாய்நோமோ தாழ்ந்தேனைத்
தூக்கின் மலர்க்கை துவளுமோ - நோக்கின்
வலிக்குமோ நின்கடைக்கண் வள்ளலுக்கு முள்ளஞ்
சலிக்குமோ சோணா சலா (41)
நன்னெஞ்சு கடனுன்ற னாணமலர்த்தாள் பூசியே
னென்னெஞ் சதல்லா யிருப்பதா - னின்னெஞ்சுங்
கல்லாபார் மேலென்னைக் காவாதென் காரணமோ
சல்லாபா சோணா சலா (42)
தஞ்சமென நின்கமலத் தாளடைந்து நானிருக்க
வஞ்சநம னென்பால் வருவானோ - நஞ்சமிக்க
பொங்கரா வேணிப்புனி தர்மார்க் கண்டனையாக
சங்கரா சோணா சலா (43)
கரங்குவித்து மெய்சிலிர்த்துக் கண்ணீ ருதிர்த்துச்
சிரங்குவித்துத் தெண்டனிட்டுத் தேம்பி - யிரங்குணர்க்கு
வந்திடுவாய் கேட்ட வரந்தருவாய் நாயேற்கென்
தந்திடுவாய் சோணா சலா (44)
ஒருவனொ ருத்தியுட னோகை பெறக்கூடும்
யருவம் பனித்துளிபோற பாய்ந்து - கருவுற்
றுருவஞ்சார்ந் துறபவித் திங்கோடி யுழலாதான்
சருவஞ்சா சோணா சலா (45)
வன்பிறவி நோய்க்கு மருந்தா விருந்தடியார்
துன்பிறவி ழிக்குநினைச் சூழ்ந்தவருக் - கென்பிறசீர்
சிற்பரா வம்பலத்திற் றெய்வநடஞ் செய்தருளுந்
தற்பரா சோணா சலா (46)
ஓரூரென் றில்லாம லோடெடுத்துப் பிச்சைக்கா
வூரூராச் சுற்றி யலைகின்றாய் - பேரூரி
லேற்றுவாயென் றுன்னை யெப்படி யானம்புவது
சாற்றுவாய் சோணா சலா (47)
அன்பார வுன்ற னடிக்கமலம் பூசித்த
லென்பார மென்னை பிரசித்த - லுன்பாரங்
காரணாதீதா கருணாகரா மழுமான
தாரணா சோணா சலா (48)
பந்தக்கா னென்னப் பருத்தவுடல் சுமப்பே
னந்தக்காலன் வெருண்டெ னாவிகொள - வந்தக்கா
லஞ்சிலிப் பேனீவந் தருளாயே லென்செய்வேன்
சஞ்சலிப்பேன் சோணா சலா (49)
ஒருமணத்தை நீக்கி யுயர்நா வலூரர்க்
கிருமணத்தைச் செய்தாண்ட தென்னீ - வருமணத்தோர்
மாட்சியோ வெண்பாரேல் மங்கையுமை கங்கையிவர்
சாட்சியோ சோணா சலா (50)
ஞாதுரு மெய்ஞ்ஞான நவிலரிய நேயமென
வோதுருமம் முப்புருளி னுண்மைதனைப் - பேதுறுவேன்
றேர்வேனோ தேர்ந்துன் றிருவாளர் தஞ்சபையிற்
சார்வேனோ சோணா சலா (51)
ஞானமிட லோடருந்து நாரணனே யாதியரிக்
காலமிடர் தீர்த்தெம்மைக் காத்தியென - வோலமிட
கஞ்சுமுண்டா வுன்னைவிட நாயேற்கு லகிலொரு
தஞ்சமுண்டா சோணா சலா (52)
அபய கரமு மருள்சேர் முகமு
முபய பதமு முமையா - ளிபமுகன்சேய்
நண்ணவா மால்விடைமே னாயேன் சரணுனக்கே
தண்ணவா சோணா சலா (53)
அன்பே திரியா வருளே நெய்யாமிக
நன்போக மகலா நாணாளு - முன்பேமெய்ஞ்
ஞானமாந் தீபமிட்டு நண்பொடுவாழ் வாழ்வருளசீர்த்
தானமாஞ் சோணா சலா (54)
மணமென்று கூறியதோர் வாயாலே மற்றும்
பிணமென்று கூறுகின்றார் பின்பு - குணமென்ற
வெம்மதியே னானானுமெய் யினைமெய்யென் றணுவுஞ்
சம்மதியேன் சோணா சலா (55)
மாசகன்ற வாதவூர் வள்ளல் வழங்குமணி
வாசகமே மாமறைக்கு மாண்பென்றே - பேசுவே
னங்கை யானீயெழுது மன்பேபெருஞ் சான்றாஞ்
சங்கையா சோணா சலா (56)
இரந்தும் பரிந்தே யிடுவென்று நீதி
கரந்துவிடா திருக்கக் கச்சூர்ப் - பொருந்தி
யுணவா தரித்து நம்பியுண்ண வளித்தாய்சீர்
தணவாத சோணா சலா (57)
பாலையளித் தாய்காழிப் பாலனா ரின்புறவே
சூலையளித் தாயப்பர் துன்புறவே - யேலவிவை
நன்மையோ வாயுண் முறைகாமத்தி னால்விளைந்த
தன்மையோ சோணா சலா (58)
கற்பனையெ லாங்கடந்த காரணா தீதசுக
தற்பரனே நின்றாள் சரண்புகுந்தே - னற்பனெனக்
கொள்ளாதே குற்றங் குறியாதே யன்னியமாக
தள்ளாதே சோணா சலா (59)
பூசேன் விபூதிதனைப் பூணேன் சிவமணியைப்
பேசேன் பஞ்சாக்கரத்தைப் பேதமையை - வீசேன்
வலவனே போற்றிரிவேன் வாழ்வேனோ வேணிச்
சலவனே சோணா சலா (60)
அளவை கடந்த வருளொளி யேநின்பே
ரருளை யணுவு முணரேன் - களவகன்றோர்
தந்நிதியே மெய்ஞ்ஞான தாண்டவா வானந்த
சந்நிதியே சோணா சலா (61)
தொண்டர்களு மாதலருந் தூயசிவ காமியுநல்
லண்டர்களுங் காணமன்று ளாடுகின்றாய் - பண்டிருவர்
காணோ மேயென்று கருதுங் கமலப்பூந்
தாணோமே சோணா சலா (62)
ஆணிலே பெண்ணிலே யல்லா வுயிர்களிலே
வீணிலே யென்போல் விழைவர்யார் - வேணி
வியாளனே பொல்லா வினையேனைக் காப்பாய்
தயாளனே சோணா சலா (63)
தொல்லை வறுமையினாற் சோர்ந்தாலு மென்மேனி
யில்லையெனும் லோபிகளை யாசியேன் - றில்லையிலே
வேம்பசிவ தைக்கழுஞ் சேய்வேண்டும் பாலாழிதந்த
சாம்பசிவா சோணா சலா (64)
கருணைபுரிந் தென்னைநீ காத்தியே லென்ன
யருணையடைந் ததுண்டோ வன்பாத - தருணமல
ரிண்டையுண்டோ தொண்டுண்டோ வென்னுண்டென் றனபாசெய்யுஞ்
சண்டையுண்டோ சோணா சலா (65)
திட்டுண்டு வெண்ணெய்த் திருடியுண்டு மாதராற்
கட்டுண் டடியுண்டான கண்ணனே - பிட்டுண்டு
வாழ்வெவர்க்கு நல்கவே மாறனடி யுண்டாயநீ
தாழ்வெவர்க்குச் சோணா சலா (66)
தாயுமிலை தந்தையிலை தான்றனிய னானாயநீ
சேயுமிலை சேய்களுக்குத் தோந்திதனை - யாயுங்கால்
வர்க்கமிலை முன்பின மரபிலைநீ வத்துவென்னத்
தர்க்கமிலை சோணா சலா (67)
நண்ணியவெற் போவெள்ளி நற்சிலையும் பொற்சிலையாம்
புண்ணியமா தேவியன்ன பூரணியே - யுண்மையிவை
நம்புமேனன்று பத்தூர் நாடியிரந் துண்டகதை
சம்புவே சோணா சலா (68)
விளைவான் மலிந்திடு நெல்வேலி யுனக்குண்ட
விளையான் குடிமாற னின்பா - முளையதனை
வாரிவருங் காலை மறுக்காயோ மால்விடைமேற்
சாரிவருஞ் சோணா சலா (69)
அண்ணா மலையானா யப்பநீ தாயுமையு
முண்ணா முலையா னாளுண்மைசொல - வொண்ணாதா
மிக்கதோ நல்லோர் வியந்து துதிசெய்யத்
தக்கதோ சோணா சலா (70)
சூதாடப் பொய்பேசத் தூயோரை நிந்திக்க
வாதாட வஞ்சிக்க வல்லவன்யான் - வேதாவின்
றோதகமோ நின்றாடு திக்கறியே னென்னுடைய
சாதகமோ சோணா சலா (71)
குகைநமசி வாயர் குருநமசி வாயர்
தகையுறு வெண்பா மாலைசாத்திப் - புகழடைந்தா
ரேத்துகின்றே னுள்ளபடி யில்லையவா போலச்
சாத்துகின்றேன் சோணா சலா (72)
நந்தவனம் புக்கு நறுமா மலரெடுத்துச்
சந்தரப்பன் மாலைதொடுத் தணிந்தே - யெந்தை
யருணேசா வென்பாரை யாபத்திற் காக்குந்
தருணேசா சோணா சலா (73)
முயலகன் மேல்வைக்கா முளரித் தாளிந்த
மயலகன் மேல்வைத்து மகிழலா - வியல்சேர்
பரதமே செய்க பகனுனக்கு முண்டு
சரதமே சோணா சலா (74)
பூவடிவம் வெற்பரையன் புத்திரிக்குத் தீண்டரிய
தீவடிவ நின்றனக்கேற் சீர்க்கச்சி - மாவலக்கீழ்த்
தந்தேகம் வாடாமற் றான்வளைத்தா ணீயிளைத்தால்
சந்தேகஞ் சோணா சலா (75)
நன்மார்க்க நான்மார்க்க நண்ணுஞ் சரியையுறு
முன்மார்க்க மேனு முயலாத - வென்மார்க்கந்
துன்மார்க்க மாதலினாற் சூழ்வதெங்கே மேலான
சன்மார்க்கஞ் சோணா சலா (76)
பல்லாயிரந் தரமாப் பாலன்குறை யெல்லாஞ்
சொல்லா திருக்கவிலை சொல்லியுமென் - பொல்லாத
புத்தியின் றோடத்தாற் பொருத்தமின்றோ வாண்டருளிச்
சத்தியின்றோ சோணா சலா (77)
ஆடரங்கா வன்பர்மன மானந்தக் கூத்துகந்தாய
கோடரங்கா ணென்றன் கொடியமன - நீடரங்க
மண்டிப்பாய்வேக மடங்கவெங்கு மோடுவதைத்
தண்டிப்பாய் சோணா சலா (78)
மழைகுளிர்வெங் காற்றுருமு வல்லடிதீ வெய்யில்
குழைபசிநோய் கள்ளர் கொடுங்கோல் - விழைகூற்றாற்
றீங்குவா ராதுவலஞ் செய்வாரை நீயிருந்து
தாங்குவாய் சோணா சலா (79)
பூமாலை கையும் புனன்மாலை நேத்திரமும்
பாமாலை நாவும் பரிந்தணியுந் - தாமே
நெடுமாலைத் தேடவைத்த நீயெனைச்சேர் பார்கூய்த்
தடுமாலைச் சோணா சலா (80)
முற்காசி மன்னன் முகத்தைக் குரங்காக்கிப்
பிற்காசி கந்தவருள் பெய்தனையே - யெற்காசி
யப்படியேன் றண்டித் தருள்புரியா யந்தோயான்
றப்படியேன் சோணா சலா (81)
தென்பாகத் தேவியுடன் சேர்ந்துசிறுத் தொண்டரிட்ட
வன்பாங் கறியை யருந்தற்கே - யின்பாப்போய்ச்
சீராளா வென்றழையுஞ் சேயையெனத் தந்தளித்த
தாராளா சோணா சலா (82)
ஆக்குவாய் காப்பா யழிப்பாய் மறைப்பாய்பின்
னோக்குவா யாவு நொடிப்போதே - தாக்கு
மிமியேற்கு நேரந்தா னெத்தனையோ கற்பந்
தமியேற்குச் சோணா சலா (83)
தாயிலாச் சேய்போற் றவிக்கின்றே னென்றுரைத்தா
லாயிலா னானென்ற றைவையென - வாயிலா
வூமனே யொத்தியா னொன்றுமுரை யேனிதழித்
தாமனே சோணா சலா (84)
அனங்காணா னஞ்சுண்டா னம்மை வினையாற்
புனையுடம்பும் பாதியாய்ப் போனான் - றினமுந்தா
னேமாந்த மானிடனென் றெள்ளாம லேத்துவதென்
றாமாந்தர் சோணா சலா (85)
சங்கரியத் தங்கொளலாற் சக்கரமான் மன்னுதலால்
வெங்கரி பயந்தவணன் மேவலா - லிங்கரிது
நிற்குருவே யென்னுருவே நீமுழுதுங் கொண்டுறைவாய்
சற்குருவே சோணா சலா (86)
மோன முடிவே மொழியவரு மானந்த
ஞான வடிவேநின் னலமுழுதுந் - தீன
னியம்புவே னெவ்வா றினியவருள் செய்யாய்
சயம்புவே சோணா சலா (87)
முத்தே மணியே முழுவயிரப் பொற்றூணே
சித்தே யெமதுகுல தெய்வமே - சுத்தகுண
மேருவே நற்கருணை மேகமே வந்தடைந்தேன்
றாருவே சோணா சலா (88)
சோதிக்க லாமா தொழும்பனேன் றன்னைமிக்க
வாதிக்க லாமா மணியரவம் - பாதிக்
கலாமதிகஞ் சேரவைத்த காரணநின் றாட்குச்
சலாமதிகஞ் சோணா சலா (89)
அண்டாண்ட கோடி யருளா லளித்தடிமை
கொண்டாண்ட சோதிக் குருமணிநீ - கண்டாய்
சமுகனே யாகவெனைத் தொண்டுகொள் வாயன்பர்
சமுகனே சோணா சலா (90)
திருவல கிட்டுத் திருமெழுக்கு மிட்டு
மருவுதிருக் கோலமிட்டு வாழ்த்திப் - பெருகுதளி
கம்பத்தே கத்துடனே கைகூப்பிச் சூழ்வதுநற்
சம்பத்தே சோணா சலா (91)
உருவா யருவா யுருவருவாய் நின்ற
வொருவா வுபதேச மோதக் - குருவாய்
வரவேண்டு முன்றன் மலர்ச்சரணத் தன்பு
தரவேண்டுஞ் சோணா சலா (92)
ஆரூரு மம்பலமு மானந்த கானமெனும்
பேரூரங் கட்டமெனப் பேணுகிலேன் - சீரூர்
நித்தியமே நின்னூர் நினைக்கின்றேன் முத்திபெறச்
சத்தியமே சோணா சலா (93)
பாரறியா விண்ணறியா பாதாளந் தானறியா
யாரறிவா ருன்றனருஞ் சீர்த்தி - யோரணுவும்
யானறியாத் தன்மையதே யெம்பெருமா னின்னமுநீ
தானறியாய் சோணா சலா (94)
கார்த்திகைக்குக் கார்த்திகைநாட் காட்சிபெறக் காட்டுகின்ற
சீர்த்திவளர் மெய்ஞ்ஞான தீபத்தை - யேத்தி
மதுரநேயத் தமிழால் வாழ்த்த வரந்தாராய்
சதுரனே சோணா சலா (95)
வானே முதலட்ட மாமூர்த்தி யாயமர்ந்த
யேனே வுலகுய்ய வெண்ணியோ - வானே
றதிபதியே ஞான வருணிதியே சீலச்
சதிபதியே சோணா சலா (96)
சம்புவே யென்றுனது தாணினைக்க வொட்டாம
லைப்புலத்தார்கூடி யலைக்கின்ற - வெம்பிறவி
வெந்தோடநீங்கு விபவமருள் வாய்மிகவுஞ்
சந்தோடஞ் சோணா சலா (97)
சோதனை செய்யாதே சுயவடிவா வந்தென்னை
யாதரிப்பாய் காட்டி லருச்சுனனின் - பாதமலர்
நாடினான் வேடுவனா நண்ணினாய் வில்லாலே
சாடினான் சோணா சலா (98)
வெள்ளையா வின்னும் விளம்புவதென் மென்கனிதேர்
கிள்ளைமொழி போலிதனைக் கேட்டருள்க - பிள்ளைநான்
மாதாநீ தொண்டனான் வணபதிநீ யேழைநான்
தாதாநீ சோணா சலா (99)
அருணாசலா வென்றே யன்புடனே போற்றி
யிருணாச மெய்த்தீப மிட்டோர் - பெருவாழ்வைச்
சிந்தையே செய்தளவு தோந்துரைக்க வொண்ணாதென்
றந்தையே சோணா சலா (100)
சோணாசல வெண்பா முற்றிற்று,
இருபாஃ இருபது(ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார்)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - I :
இருபாஃ இருபது (ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார்)
அன்பர்களே,
மெய்கண்ட சாத்திரங்கள் 14-இல் தலை சிறந்தது மெய்கண்டாரின் சிவஞானபோதமாகும். தமிழ் தத்துவச் சிந்தனையின் சிகரமாய் தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும் ஆழத்தை கொண்டுள்ளதாகத் திகழ்கின்றது. அதற்கு அடுத்தபடியாக எண்ணத் தருவது இருபா இருபது என்னும் சிறிய நூலாகும். மெய்கண்டார் மேற்பார்வையில் எழுந்தனவாக அருணந்தியின் சிவஞானசித்தியாரும் இந்நூலும் மனவாசகங் கடந்தாரின் "உண்மை விளக்கம்" எனும் நூலும் ஆகும்.
அன்பன் கி.லோகநாதன்
1.
கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி
மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் -- வெண்ணெய் நல்லூர்
மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்
2.
கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ!
காரா கிரகக் கலி ஆழ்வேனை நின்
பேரா இன்பத்து இருத்திய பெரும!
வினவல் ஆனாது உடையேன் எனது உளம்
நீங்கா நிலை ஊங்கும் உளையால்
அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின்
ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல்
திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய்
சுத்தன் அமலன் சோதி நாயகன்
முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா
வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப்
வேறும் இன்றாகும் எமக்கு எம் பெரும!
இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும்
பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதலின்
வேறோ உடனோ விளம்பல் வேண்டும்
சீறி அருளல் சிறுமை உடைத்தால்.
அறியாது கூறினை அபக்குவ பக்குவக்
குறிபார்த்து அருளினம் குருமுதலாய் எனின்
அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும்
பக்குவம் வேண்டில் பயன் இலை நின்னால்
பக்குவம் அதனால் பயன்நீ வரினே
நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ
தன் ஒப்பார் இலி என்பதும் தகுமே
மும்மலம் சடம் அணு மூப்பு இளமையில் நீ
நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ
உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே
இணை இலி ஆயினை என்பதை அறியேன்
யானே நீக்கினும் தானே நீங்கினும்
கோனே வேண்டா கூறல் வேண்டும்
"காண்பார் யார்கொல் காட்டாக்கால்" எனும்
மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன்
கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின்
"ஆட்பால் அவர்க்கு அருள்" என்பதை அறியே
3.
அறிவு அறியாமை இரண்டும் அடியேன்
செறிதலால் மெய்கண்ட தேவே -- அறிவோ
அறியேனோ யாது என்று கூறுகேன் ஆய்ந்து
குறிமாறு கொள்ளாமல் கூறு.
4.
கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கில் விகற்பம் கற்பம்
குரோதம் மோகம் கொலை அஞர் மதம் நகை
விராய் எண் குணனும் ஆணவம் என விளம்பினை
அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம்
பைசால சூனியம் மாச்சரியம் பயம்
ஆயேழ் குணனும் மாயைக்கு அருளினை
இருத்தலும் கிடத்தலும் இருவினை இயற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவல் என்று எடுத்த
அறுவகைக் குணனும் கருமத்து அருளினை
ஆங்கு அவைதாமும் நீங்காது நின்று
தம்வழிச் செலுத்தித் தானே தானாய்
என்வழி என்பது ஒன்று இன்றாம், மன்ன!
ஊரும் பேரும் உருவுங் கொண்டு என்
ஊரும் பேரும் உருவுங் கெடுத்த
பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதியில்
சைவ சிகாமணி! மெய்யர் மெய்ய!
மும்மலம் சடம் என மொழிந்தனை அம்ம
மாறுகோள் கூறல் போலும் தேறும்
சடம்செயல் அதனைச் சார்ந்திடும் எனினே
கடம்படம் அதனுள் கண்டிலம் விடப்படும்
ஊந்நிரள் போன்றது ஆயில் தோன்றி
அணைந்து ஆங்கு அகறல் வேண்டும் குணங்களும்
பன்மை இன்று ஆகும் எம்மைவந்து அணையத்
தானோ மாட்டாது யானோ செய்கிலன்
நீயோ செய்யாய் நின்மலன் ஆயிட்டு
இயல்பு எனில் போகாது என்றும் மயல்கெடப்
பந்தம் வந்தவாறு இங்கு
அந்தம் ஆதி இல்லாய் ! அருளே.
5.
அருள் முன்பு நில்லாது அடியேற்குக் கண்ணின்று
இருள்கொண்டவாறு என்கொல் எந்தாய்! -- மருள்கொண்ட
மாலையாய்! வெண்ணெய்வாழ் மன்னவா! என்னுடைய
மால் ஐயா மாற்ற மதி.
6.
மதிநுதல் பாகன் ஆகிக் கதிதர
வெண்ணெய்த் தோன்றி நணி உள் புகுந்து என்
உளம்வெளி செய்து உன் அளவில் காட்சி
காட்டி என் காட்டினை எனினும் நாட்டிஎன்
உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல்
பாதாள சத்தி பரியந்தம் ஆக
ஓதி உணர்ந்த யானே ஏக
முழுதும் நின்றனனே, முதல்வ! முழுதும்
புலன்கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி
ஆங்கு ஐந்து அவத்தையும் அடைந்தனன் நீங்கிப்
போக்கு வரவு புரிந்தனன் தூக்கி
எவ்விடத்து உண்மையும் இவ்விடத்து ஆதலும்
செல் இடத்து எய்தலும் தெரித்த மூன்றினும்
ஒன்று எனக்கு அருளல் வேண்டும் என்றும்
இல்லது இலதாய் உள்ளது உளது எனும்
சொல்லே சொல்லாய்ச் சொல்லும் காலைச்
சிறுத்தலும் பெருத்தலும் இலவே நிறுத்தி
யானை எறும்பின் ஆனது போல் எனில்
ஞானம் அன்று அவை காய வாழ்க்கை
மற்றவை அடைந்தன உளவெனின் அற்றன்று
விட்ட குறையின் அறிந்து தொன்று
தொட்டு வந்தனன் என வேண்டும் நட்ட
பெரியதில் பெருமையும் சிறியதில் சிறுமையும்
உரியது நினக்கே உண்மை, பெரியோய்!
எனக்கு இன்று ஆகும் என்றும்
மனக்கு இனியாய்! இனி மற்றது மொழியே
7.
மொழிந்த அவத்தை முதல் அடியேன் நின்றாங்கு
ஒழிந்தன நான்கும் உணர -- இழிந்து அறிந்து
ஏறிற்று இங்கு இல்லை எழில் வெண்ணெய் மெய்த்தேவே!
தேறிற்று என் கொண்டு தெரித்து.
8.
தெரித்தது என் கொண்டு எனை உருத்திர பசுபதி!
செடிய னேனையும் அடிமை செய்யப்
படிவம் கொண்டு வடிவுகாட்டு இல்லாப்
பெண்ணை ஆளும் வெண்ணெய் மெய்ய!
அவத்தையில் தெரித்தனன் ஆயின் அவத்தை
தெரித்தாங்கு இருத்தலும் இலனே திருத்தும்
காலம் முதலிய கருவி ஆயின்
மாலும் பிரமனும் வந்து எனை அடையார்
ஓதும் காலை ஒன்றை ஒன்று உணரா
சேதனம் அன்று அவை பேதைச் செயலும் இச்
சேதன ஆனால் செயல் கொள வேண்டும்
போதம் அவற்றைப் புணர்வதை அறியேன்
கருவித் திரளினும் காண்பது ஓர் ஒன்றாய்
ஒருவுதல் அறியேன் உணர்வு இலன் ஆதலின்
நிற்கொடு கண்டனன் ஆயின் எற்குக்
கருவி ஆயினை பெருமையும் இலவே
யானே பிரமம் கோனே வேண்டா
இன்னும் கேண்மோ, மன்ன! நின்னின்
முன்னம் என்றன் உணர்வு இலன் ஆதலின்
என்னைக் காண்பினும் காண்பல உன்னோடு
ஒருங்கு காண்பினும் காண்பல அரும்துணை
கண்டவாறு ஏது எனது கண்ணே!
அண்டவாண! அருட்பெரும் கடலே!
9.
கடல் அமுதே! வெண்ணெய்க் கரும்பே! என் கண்ணே!
உடலகத்து மூலத்து ஒடுங்கச் -- சடலக்
கருவியாது ஆங்கு உணர்த்தக் காண்பதுதான் என்னை
மருவியது என்று உரைக்க மன்.
10.
மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அன்னியம் ஆக்கி அருள்வழி அதனால்
என்னுள் புகுந்தனை எனினே முன்னைத்
திரிமலம் தீர்த்த தேசிக! நின்னோடு
உருவுதல் இன்றி உடந்தையே ஆகும்
பெருநிலை ஆகல் வேண்டும் மருவிடும்
மும்மலம் அதனால் எம்முள் நின்றிலை எனில்
அம்மலத் திரிவும் செம்மலர்த் தாள்நிழல்
சேர்தலும் இலவாய்ச் சார்பவை பற்றிப்
பெயர்வு இலன் ஆகும், பெரும! தீர்வு இன்று
அமைந்த கருமத்து இயைந்ததை அல்லது
சமைந்தன இலஎனச் சாற்றில் அமைந்த
மாயேயம் கன்மம் மாமலம் மூன்றும்
மாயாது ஆகவே ஆர்ச்சன மாயையின்
உற்பவம் தீராது ஒழுகும் ஒன்று ஒன்று
நிற்சமம் ஆயின் அல்லது நிற்பெறல்
இல்லென மொழிந்த தொல் அறம் தனக்கும்
ஏயாது ஆகும் நாயேன் உளத்து
நின்றனை என்பனோ நின்றிலை என்பனோ
பொன்றிய பொன்றிற்றில மலம் என்பனோ
ஒன்றினை உரைத்து அருள் மன்ற குன்றாப்
பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க்கு அதிபதி!
கைகண் தலைவாய் கால்செவி மூக்கு உயர்
மெய்கொண்டு என்வினை வேர் அறப் பறித்த
மெய்கண்ட தேவ! வினையிலி!
மைகொண்ட கண்ட! வழுவிலென் மதியே!
11.
மதிநின்பால் இந்த மலத்தின்பால் நிற்க
விதிஎன்கொல் வெண்ணெய்வாழ் மெய்ய! -- பதிநின்பால்
வந்தால் இதில்வரத்தில் வந்து இரண்டும் பற்றுகிலேன்
எந்தாய் இரண்டு ஆமாறு என்
12.
எண்திசை விளங்க இருட்படாம் போக்கி
முண்டகம் மலர்த்தி மூதறிவு அருளும்
மேதினி உதய மெய்கண்ட தேவ!
கோதுஇல் அமுத! குணப்பெரும் குன்ற!
என்னின் ஆர்தலும் அகறலும் என்னைகொல்
உன்னில் துன்னி உனாவிடில் பெயர்குவம்
என்னும் அதுவே நின் இயல்பு எனினே
வியங்கோள் ஆளனும் ஆகி இயங்கலும்
உண்டு எனப்படுபவை எண்தாள் முக்கண்
யாங்கணும் பிரியாது ஓங்கு நின் நிலையின்
யான் வந்து அணைந்து மீள்குவன் ஆயின்
ஆற்றுத்துயர் உற்றோர் அணிநிழல் நசைஇ
வீற்றுவீற்று இழிதர வேண்டலும் வெறுத்தலும்
இன்றிச் சாயைக்கு நன்றுமன் இயல்பே
அனையை ஆகுவை நினைவு அரும் காலை
இந்நிலை அதனில் ஏழையேற்கு இரங்கி
நின்னை வெளிப்படுத்து ஒளிப்பை நியேல்
அருள்மாறு ஆகும், பெரும! அ•து அன்றியும்
நிற்பெற்ற அவர்க்கும் உற்பவம் உண்டு எனும்
சொற்பெறும் அ•து இத் தொலுலகு இல்லை
அவ்வவை அமைவும் சோர்வும் மயர்வுஅறச்
சொல்லில் சொல்லெதிர் சொல்லாச்
சொல்லே சொல்லுக சொல் இறந்தோயே!
13.
இறந்தோய் கரணங்கள் எல்லாம் எனக்குச்
சிறந்தோய் எனினும் மெய்த் தேவே! -- பிறந்து உடனாம்
காயம் கொளவும் கொளாமலும் கண்டதுநீ
ஆயன்கொல் பாதவத்து அற்று
14.
அற்றதுஎன் பாசம் உற்றது உன் கழலே
அருள்துறை உறையும் பொருள்சுவை நாத!
வேறு என்று இருந்த என்னை யான் பெற
வேறு இன்மை கண்ட மெய்கண்ட தேவ!
இருவினை என்பது என்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கு எனும் மூன்றின்
இதமே அகிதம் எனும் இவை ஆயில்
கணத்திடை அழியும் தினைத்துணை ஆகா
காரணம் சடம் அதன் காரியம் அ•தால்
ஆரணங்கு ஆம் வழி அடியேற்கு என்னைகொல்
செயல் எனது ஆயினும் செயலே வாராது
இயமன் செய்தி இதற்கு எனில் அமைவும்
பின்னை இன்று ஆகும் அன்னதும் இங்குச்
செய்திக்கு உள்ள செயல் அவை அருத்தின்
மையல்தீர் இயமற்கு வழக்கு இல்லை, மன்ன!
ஒருவரே அமையும் ஒருவா ஒருவற்கு
இருவரும் வேண்டா இறைவனும் நின்றனை
நின்னது கருணை சொல் அளவு இன்றே
அமைத்தது துய்ப்பின் எமக்கு அணைவு இன்றாம்
உள்ளது போகாது இல்லது வாராது
உள்ளதே உள்ளது எனுமுரை அதனால்
கொள்ளும் வகையால் கொளுத்திடும் ஆயின்
வள்ளன்மை எலாம் உள்ளிட அமையும்
ஈய வேண்டும் எனும்விதி இன்றாம்
ஆயினும் என்னை அருந்துயர்ப் படுத்தல்
நாயி னேற்கு நன்றுமன் மாயக்
கருமமும் கரும பந்தமும்
தெருள அருளும் சிவபெரு மானே!
15.
மான் அமரும் செங்கை மதில்வெண்ணெய் வாழ்மன்ன!
போனவினை தானே பொருந்துமோ -- யான் அதனில்
ஆவனோ ஆக்காய் அமலனாம் நின் அருள்தான்
தேவனே! யாதுக்கோ தேர்.
16.
தேராது உரைப்பன் தெருமரல் உள்ளத்தொடு
பேராது அருளுதல் பெரியோர் கடனே
நின்னைக் கலப்பது என் உண்மை எனில்
நினது நேர்மை சொல்மனத்து இன்றே
எழுவகைத் தாதுவின் ஏழ்துளை இரண்டும்
பெருமுழைக் குரம்பையில் பெய்து அகத்து அடக்கி
நீக்கி என்றனைப் போக்குஅற நிறுத்தி
இச்சை முதலிய எழுப்பி நடத்திடும்
விச்சை சாலவும் வியப்பு அது நிற்க
வாக்கும் மனமும் போக்கு உள தனுவும்
சொல்லும் நினைவும் செய்யும் செயலும்
நல்லவும் தீயவும் எல்லாம் அறிந்து
முறை பிறழாமல் குறைவு நிறைவு இன்றாய்க்
காலமும் தேசமும் மால் அற வகுத்து
நடுவுநின்று அருத்தலின் நடுவன் ஆகுதியே
சான்றோர் செய்தி மான்று இருப்பு இன்றே
சாலார் செயலே மால் ஆகுவதே
அத்துவா மெத்தி அடங்கா வினைகளும்
சுத்திசெய் தனையே ஒத்த கன்மத்திடை
நீங்கின என்னை ஊங்கு ஊழ் வினைகளும்
ஆங்கு அவை அருத்துவது ஆரைகொல் அதனால்
கருமம் அருத்தும் கடன் அது இன்றாம்
தருமம் புரத்தல் பெருமையது அன்றே
கண்ணினுள் மணிய! கருத்தினுள் கருத்த!
வெண்ணெய் வேந்த! மெய்கண்ட தேவ!
இடர்படு குரம்பையில் இருத்தித்
துடைப்பது இல்லா அருள் தோன்றிடச் சொல்லே.
17.
சொல்தொழும்பு கொள்ள நீ சூழ்ந்ததுவும் நின்செயல்கள்
மற்றவர்கள் நின்நோக்கில் மாய்ந்த உயிர்க் -- குற்றம்
ஒளித்தி யாங்கு, ஐய! உயர்வெண்ணெய் நல்லூர்க்
குளித்தமதுக் கொன்றை எம் கோ!
18.
கோலம் கொண்ட ஆறு உணராதே
ஞாலம் காவலன் யான் எனக் கொளீஇப்
பொய்யை மெய்யனப் புகன்று வையத்து
ஓடாப் பூட்கை நாடி நாடா
என்னுள் கரந்து என் பின் வந்து அருளி
என்னையும் தன்னையும் அறிவின்றி இயற்றி
என்னது யான் எனும் அகந்தையும் கண்டு
யாவயின் யாவையும் யாங்கணும் சென்று
புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து
மிக்க போகம் விதியால் விளைத்திட்டு
என்பணி ஆளாய் எனைப் பிரியாதே
ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு
என்வழி நின்றனன் எந்தை அன்னோ
அருள்மிக உடைமையின் அருள்துறை வந்து
பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை ஆதலும்
கைகண்டு கொள்ளெனக் கடல் உலகு அறிய
மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீஇத்
தன்னுள் கரந்து தான்முன் ஆகித்
தன்னதும் தானுமாய் என்னை இன்றாக்கித்
தன்னையும் என்னையும் தந்து தனது
செய்யாமையும் என்செயல் இன்மையும்
எம்மான் காட்டி எய்தல்
அம்ம எனக்கே அதிசயம் தருமே.
19.
தருமா தருமத் தலைநின்று ஆழ்வேனைக்
கருமா கடல்விடம் உண் கண்டப் -- பெருமான்
திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத்தான்
உரு என்ன வந்து எடுத்தான் உற்று.
20.
உற்றவர் பெற்றவர் அற்றவர் முற்றும்
அற்றவர்க்கு அற்றவன் அல்லவர்க்கு அல்லவன்
அந்தம் ஆதி இல்லவன் வந்து
குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும்
பரப்பைக் குவித்து நிறுத்திப் பிடித்திட்டு
இருள்வெளி ஆகும் மருளினை அறுத்து
வந்து புகுதலும் சென்று நீங்கலும்
இன்றி ஒன்றாய் நின்ற அந்நிலையில்
ஒன்று ஆகாமல் இரண்டா காமல்
ஒன்றும் இரண்டும் இன்றா காமல்
தன்னது பெருமை தாக்கான் ஆயினும்
என்னது பெருமை எல்லாம் எய்தித்
தன்னை எனக்குத் தருவதை அன்றியும்
என்னையும் எனக்கே தந்து தன்னது
பேர் ஆனந்தப் பெரும் கடல் அதனுள்
ஆரா இன்பம் அளித்துத் தீரா
உள்ளும் புறம்பும் ஒழிவுஇன்றி நின்ற
வள்ளனமை காட்டி மலர் அடி அருளிய
மன்னன் எங்கோன் வார்புனல் பெண்ணை
வெண்ணெய் காவலன் மெய்கண்டதேவன்
அண்ணல் அருள் ஆலயத்தன் நண்ணிய
மலம் முதலாயின மாய்க்கும்
உலக உயிர்க் எல்லாம் ஒரு கண்ணே.
(முற்றும்)
Sunday 13 January 2019
திதிகளின் அதிதேவதைகள்
திதிகளின் அதிதேவதைகள்;
-------------------------------------
திதிகளின் எண்ணிக்கை மொத்தம் 15 ஆகும்.வளர்பிறை திதிகள் பூர்வபட்ச திதிகள் என்றும்,தேய்பிறை திதிகள் அமரபட்ச திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
பிரதமை முதல் பவுர்ணமி வரையிலுள்ள - திதிகள் - பதினைந்தற்கும் - பதினைந்து தேவிகள் உள்ளனர். அவர்கள் நித்யா தேவிகள் என்று அழைக்கப்படுவர். திதியும் - தேவிகளின் பெயர்களும் (அதிதேவதைகள்);
1. பிரதமை - காமேஸ்வரி
2. துவதியை - பகமாலினி
3. திரிதியை - நித்யக்லின்னை
4. சதுர்த்தி - டேருண்டா
5. பஞ்சமி - வந்நிவாசினி
6. ஷஷ்டி - மஹாவஜ்ரேஸ்வரி
7. ஸப்தமி - சிவதூதி
8. அஷ்டமி - த்வரிதா
9. நவமி - குலசுந்தரி
10. தசமி - நித்யா
11. ஏகாதசி - நீலபதாகா
12. துவாதசி - விஜயா
13. திரயோதசி - ஸர்வமங்களா
14. சதுர்த்தசி - ஜ்வாலாமாலினி
15. பவுர்ணமி - சித்ராதேவி
மேற்கண்ட திதிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய தேவதைகளை வணங்கினால் துன்பங்கள் விலகும்,மனம் தெளிவாகும்.காரியம் ஈடேறும்,வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
Wednesday 21 November 2018
16 வகையான தீபங்கள்
தீபங்கள் 16
தீபங்கள் 16
திருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது. இறைவனின் அருளை வெகுவிரைவாக நமக்கு அளிப்பது நாம் ஏற்றும் தீபங்களே…!
தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி கோரிய பலன்களை தருகின்றன. கர்ம வினைகள் நீங்காமல் நற்பலன்கள் கிடைக்காது. தீபங்களே கர்ம வினைகளை நீக்கக்கூடியவை. தெய்வங்களை அமைதி படுத்தக்கூடியவை. ஆனால் தீபங்களை ஏற்றுவதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவற்றை பின்பற்றி ஏற்றப்படும் தீபங்கள் நாம் நினைத்த பலனை தரக்கூடியவை.
விளக்கினை செய்யும் பொருட்களும் அதன் பலன்களும்:
மண் அகல் விளக்கு பீடைகள் விலகும்.
வெள்ளி விளக்கு திருமகள் அருள் உண்டாகும்.
பஞ்ச உலோக விளக்கு தேவதை வசியம் உண்டாகும்.
வெங்கல விளக்கு ஆரோக்கியம் உண்டாகும்.
இரும்பு விளக்கு சனி தோஷம் விலக்கும்.
விளக்கின் வகைகள்:
1. குத்து விளக்கு
உலோகத்தினால் செய்யப்பட்டது.
2. அகல் விளக்கு மண்ணால் செய்யப்பட்டது.
3. காமாட்சி விளக்கு உலோகத்தினால் செய்யப்பட்டது.
4. கிலியஞ்சட்டி விளக்கு மண்ணால் செய்யப்பட்ட அகண்ட விளக்கு.
5. செடி விளக்கு உலோகத்தால் செய்யப்பட்ட செடி போன்ற அமைப்பை உடையது.
6. சர விளக்கு உலோகத்தினால் அடுக்கடுக்காக செய்யப்பட்டது.
திருவிளக்கின் சிறப்பு: (குத்து விளக்கு)
தீப ஒளியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கும். இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் திருமாலும், நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கின்றனர்.
எனவே விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். வாயால் ஊதி அணைக்கக்கூடாது. அவ்வாறு அணைத்தால் சிவபெருமானையும், முப்பெரும் சக்திகளையும் அவமதிக்கும் செயலாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
குத்து விளக்கின் மூன்று பாகங்களும் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும். தற்போது கடைகளில் கிடைக்கும் குத்து விளக்கினை மேற்கண்ட மூன்று பாகங்களை தனித்தனியாக கழற்ற முடியும். ஒரு சிலர் அடிப்பாகத்தில் அழுக்கினை சேர விடுகின்றனர். இது பிரம்மாவை அவமதிக்கும் செயலாகும்.
உயரம் அதிகமாக உள்ளதாக நினைத்து தண்டினை கழற்றி வைத்து விட்டு மேல் மட்டும் அடிப்பாகம் இவற்றை மட்டும் பயன்படுத்துகின்றனர். இதுவும் தவறாகும். இது திருமாலை அவமதிப்பதாகும். பிரம்மா மற்றும் திருமால் இருவரும் மிகப்பெரிய சிவபக்தர்கள் ஆவர். அவர்களை அவமதிப்பது சிவபெருமானையே அவமதிப்பதாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தீபங்கள் ஏற்றும் இடங்கள்:
வீட்டின் பூசையறை, நடு முற்றம், சமயலறை, துளசி மாடம், பாம்பு புற்று, நீர் நிலைகளின் கரைகள், ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம். மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.
தீபங்கள் 16 வகைப்படும். அவை…
1. தூபம்
2. தீபம்
3. அலங்கார தீபம்
4. நாகதீபம்
5. விருஷ தீபம்
6. புருஷா மிருக தீபம்
7. சூலதீபம்
8. கமடதி (ஆமை) தீபம்
9. கஜ (யானை) தீபம்
10. வியக்ர (புலி) தீபம்
11. சிம்ஹ தீபம்
12. துவஜ (பொடி) தீபம்
13. மயூர (மயில்)தீபம்
14. பூரண கும்ப (5 தட்டு) தீபம்
15. நட்சத்திர தீபம்
16. மேரு தீபம்
விளக்கேற்றும் காலம்:
வேளை நேரம்
காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (பிரம்ம முகூர்த்தம்)
மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (தினப்பிரதோஷம்)
மேற்கண்ட காலங்களில் விளக்கேற்றுவது மிகுந்த புண்ணியத்தை தரும். நமது கர்ம வினைகள் நீங்கும். தெய்வத்தின் அருள் எளிதில் கிட்டும். நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும்.
தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்கு ஒப்பாகும். தீபத்தில் உள்ள எண்ணெய் தெய்வத்திற்கு அவிர் பாகமாக போய் சேரும். ஒருவரது இல்லத்தில் கண்டிப்பாக மேற்கண்ட இரண்டு வேளையும் விளக்கேற்ற வேண்டும். குளித்த பின்பே நாம் விளக்கேற்ற வேண்டும். குளிக்காமல் ஏற்றப்படும் விளக்கிற்கு பலன் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
விளக்கின் முகங்களும் அவற்றின் பலன்களும்: (குத்து விளக்கு)
ஒரு முகம்
நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும். துன்பங்கள் நீங்கும். நன்மதிப்பு உண்டாகும்.
இரண்டு முகம்
கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.
மூன்று முகம்
புத்திர தோஷம் நீங்கி மக்கட் பேறு உண்டாகும்.
நான்கு முகம்
அனைத்து பீடைகளும் நீங்கும். அனைத்து செல்வங்களும் கிட்டும்.
ஐந்து முகம்
எல்லா நன்மைகளும் கிட்டும். அட்ட ஐச்வரியங்களும் உண்டாகும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். திருமணத்தடை நீங்கும். புண்ணியம் பெருகும்.
விளக்கின் தீபம் நோக்கும் திசையும் அதன் பலனும்: (திசைக்காட்டியை கருத்தில் கொண்டது)
கிழக்கு
இந்திரனைப் போல் வாழ்வு உண்டாகும். அனைத்து துன்பங்களும் நீங்கும். குடும்பம் செழிப்புறும். பீடைகள் நீங்கும்.
மேற்கு
கடன் தொல்லை நீங்கும். சனி தோஷம், கிரக தோஷம் முதலான அனைத்து வகை தோஷங்களும் நீங்கும். சகோதரர்களிடையே ஒற்றுமை உண்டாகும். பங்காளிப்பகை நீங்கும்.
வடக்கு
திருமணத்தடை நீங்கும். சர்வ மங்கலமும் உண்டாகும். பெரும் செல்வம் வந்து சேரும். கல்வித்தடை நீங்கும். சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.
தெற்கு
மரணபயம் உண்டாகும். துன்பங்கள் வந்து சேரும். பாவம் வந்து சேரும். கடன் உண்டாகும்.
விளக்கில் பயன்படுத்தும் எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்:
1. நெய் கடன் தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். கிரகதோஷம் நீக்கும். செல்வம், சுகம் தரும்.
2. நல்லெண்ணெய் நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நவகிரகங்களின் அருள் உண்டாகும். தாம்பத்ய உறவு சிறக்கும். அனைத்து பீடைகளும் விலகும்.
3. தேங்காய் எண்ணெய் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும். துணிவு உண்டாகும். மனத்தெளிவு உண்டாகும்.
4. விளக்கெண்ணெய் புகழ் உண்டாகும். குலதெய்வ அருள் உண்டாகும். தேவதை வசியம் உண்டாக்கும். அனைத்து செல்வங்களும் உண்டாகும்.
5. வேப்ப எண்ணெய் கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களின் உதவி கிடைக்கும். இல்லற இன்பம் அதிகரிக்கும்.
6. இலுப்பை எண்ணெய் காரிய சித்தி உண்டாகும்.
7. வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் சகல ஐச்வர்யங்களும் உண்டாகும்.
8. நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் செல்வம் சேரும். குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றது.
9. விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்
பராசக்தி அருள் உண்டாக்கும். மந்திர சித்தி தரும். கிரகதோஷம் நீக்கும்.
குறிப்பு: கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை.
தெய்வங்களும் அவற்றிற்குரிய எண்ணெய்களும்:
விநாயகர் தேங்காய் எண்ணெய்
திருமகள், முருகன் – நெய்
குலதெய்வம் வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய்
பைரவர் நல்லெண்ணெய்
சக்தியின் வடிவங்கள் விளக்கெண்ணெய் + வேம்பெண்ணெய் + தேங்காய் எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + பசுநெய்
ருத்ர தெய்வங்கள் இலுப்பை எண்ணெய்
எல்லா தெய்வங்கள் நல்லெண்ணெய்
நாராயணன் நல்லெண்ணெய்
விளக்கின் திரிகளும் அவற்றின் பலன்களும்:
இலவம் பஞ்சுத்திரி சுகம் தரும்.
தாமரைத்தண்டு திரி முன்வினை நீக்கும். செல்வம் சேரும். திருமகள் அருள் உண்டாகும்.
வாழைத்தண்டு திரி மக்கட்பேறு உண்டாகும். மன அமைதி உண்டாகும். குடும்ப அமைதி உண்டாகும். தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும். குழந்தைப்பேறு உண்டாகும்.
வெள்ளெருக்கு திரி செய்வினை நீங்கும். ஆயுள் நீடிக்கும். குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும்.
பருத்தி பஞ்சுத்திரி தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும். வம்சம் விருத்தியாகும்.
வெள்ளைத்துணி திரி அனைத்து நலங்களும் உண்டாகும்.
சிவப்பு துணி திரி திருமணத்தடை நீக்கும். மக்கட் பேறு உண்டாகும்.
மஞ்சள் துணி திரி எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். அம்பிகையின் அருள் உண்டாகும். வியாதிகள் நீங்கும். செய்வினை நீங்கும். எதிரிகள் பயம் நீங்கும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும். மங்களம் உண்டாகும்.
பட்டுத்துணி திரி எல்லா சுபங்களும் உண்டாகும்.
விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்:
ஞாயிறு – கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் – மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் – குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி – வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.
செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
முன்பிறவி பாவம் நீக்கும் தீபம்:
வேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும். அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோயில் முன்னர் சொக்கப்பனை கொளுத்துவர்.
பொதுவான விதிமுறைகள்:
விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். இது கணவன் – மனைவி ஒற்றுமை உண்டாக்கும்.
ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!
பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’
விளக்கேற்றிய பின்பு பின்வரும் தேவாரப்பாடலை பாடவும்.
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
அகர தீபமோ குகநாதம்
உகர தீபமோ கணநாதம்
மகர தீபமோ பூதநாதம்
மகா தீபமோ சிவநாதம்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!
திருவிளக்கு பூஜை
..
எந்தப் பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் குத்து விளக்கு இடம் பெறும். சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.. குத்து விளக்கு இல்லாதவர் காமாட்சி விளக்காவது வைத்து ஏற்றுவது நல்லது..
..
தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. வீட்டில் மங்களங்கள் உண்டாகி நிலைத்து நிற்கும்..
..
விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.
ஒரு முகமும் ஏற்றி வழிபடுவது-மத்திய பலன்
இரண்டு முகம் ஏற்றி வழிபடுவது-குடும்ப ஒற்றுமை பெருகும்
மூன்று முகம் ஏற்றி வழிபடுவது-புத்திர சுகம் தரும்
நான்கு முகம் ஏற்றி வழிபடுவது-பசு, பூமி இவற்றைத் தரும்
ஐந்து முகம் ஏற்றி வழிபடுவது-செல்வத்தைப் பெருக்கும்.
தீபம் ஏற்ற தூய்மையான அகல் விளக்கு புதியது தான் பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோயில்களில் முறுபடியும் ஏற்றக்கூடாது. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.
..
அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம், ஏற்றி வழிபட வேண்டும். துர்க்கை அம்மனுக்கு மட்டும் எலுமிச்சை பழ விளக்கு 2 ஏற்றவேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.
Sunday 19 November 2017
சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் விளக்கங்கள்.
1. சிவபெருமான் ஞானக்கண் எனப்படும் நெற்றிக்கண்ணை உடையவர்,
2. உடுக்கையும் சூலாயுதத்தையும் வைத்திருப்பவர்
3. சடாமுடியும், சாம்பல் தரித்த மேனியும் உடையவர்.
4. மான், அக்னி தாங்கியவராகவும் உள்ளார்.
5. காளை மாட்டை வாகனமாக வைத்திருப்பவர்
6. நெற்றியில் திருநீற்றினால் மூன்று கோடுகள்
7. தலையில் பாயும் கங்கை..
8. பத்மாசனம் இருக்கை.
9. ஒளி மிகுந்த கண்கள் முக்கால் பாகம் மூடிய நிலையில் - தியான நிலை.
10. செம்மை நிற சடைமுடியான்.
11. தலையில் கொன்றை மலர்.
12. உடல் முழுவதும் திருநீற்று கோடுகள்.
13. கைகளிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை.
14. கழுத்தில் பாம்பு.
15. காதில் தோடுகள்
தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்கச் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். அவருடைய அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகள் சிவபெருமானை பின்தொடர்ந்து சென்றனர்.
இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி சிவனைக் கொல்லும்படி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார்.
பின்பு அந்த வேள்வியில் மானுண்டாகி வர அதனை இடக்கையில் வைத்துக்கொண்டருளினார். பின்பு மழுவுண்டாகி வர அதனை ஆயுதமாக வைத்துக்கொண்டனர்.
பின் முயலகன் என்னும் அசுரனுண்டாகி வர அவனைக் கீழே தள்ளி முதுகிலேறி நின்றார். மந்திரங்களை ஏவினார்கள் அவைகள் டமருக (உடுக்கை) ரூபங்கொண்டு வர திருக்கரத்தில் வைத்தருளினார்.
சிவபெருமானின் மாமனாரான தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க பிறைசந்திரனை சடாமுடியில் சூடிக்கொண்டார்.
காசிபர் கத்துரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்தன. அவற்றைச் சிவபெருமான் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டார்.
துருவாச முனிவரின் மாணவர் சிலாத முனிவர் என்பவருக்கும் சித்திரவதி என்ற குணவதிக்கும் குழந்தைச் செல்வம் இல்லாததால் ஸ்ரீசைல மலையில் புத்திரப்பேறு வேண்டி சிவனை நோக்கி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார்கள்.
சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி யாகபூமியை உழுதால் தங்கப் பெட்டகம் ஒன்று வெளிப்படும். அதில் ஒரு புத்திரன் தோன்றுவான். அவன் பதினாறு ஆண்டுகள் மட்டுமே பூலோகத்தில் வாழ்வான் என்று கூறி மறைந்தார். சிறந்த சிவபக்தரான அக்குழந்தையே நந்தி தேவர். சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே.
பாற்கடலிலை கடையும் பொழுது வாசுகி (பாம்பு) கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலமான கண்டத்தினை உடையவர்.
பகிரதனின் முன்னோர்களை முக்தியடைய அவரின் வேண்டுகோளை ஏற்று கங்கையை முடியில் தாங்கினார்.
யானைரூபமாகத் தோன்றிய கஜாசுரனென்பவன்
பிரம்ம தேவனை நோக்கித் தவஞ்செய்து வரம் பெற்று பிரம தேவன் தேவேந்திரன் முதலானவர்களுடன் யுத்தஞ்செய்து வென்று திரியும்போது, முனிவர்கள் கண்டு பயந்து ஓடிக் காசியில் மணிகர் நிகையென்னும் ஆலயத்துக்குப் போய்ப் பரமசிவனைச் சரணாகதியடைந்தார்கள். சுவாமி கோபத்துடன் உக்கிரமூர்த்தியாய்க் கஜாசுரன் மத்தகத்தை மிதித்து உடலைக் கிழித்துத் தோலையுரித்துப் போர்த்தருளினார்.
விஷ்ணு கடலில் மச்சாவதாரங்கொண்டு வேதங்களை அபகரித்துக்கொண்டுபோன ஒரு அசுரனை வதைத்து மயக்கமுற்று உலகம் வருந்தும்படிக் கடலைக் கலக்கியபோது தேவர்கள் சிவபெருமானை வேண்டிக்கொள்ள தேவர்கள் சிவபெருமான் ஒரு பைரவரையனுப்ப அவர்போய் வலைவீசி அந்த மீன்கண்களைப் பெயர்த்துக் கொண்டுவர அவைகளைத் தேவர்கள் வேண்டுதலினால் தமது ஸ்ரீபாதங்களிலே தரித்துக் கொண்டருளினார்.
அமிர்தமுண்டாகும்படித் தேவர்கள் பாற்கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியாகிய பாம்பினைத் தாம்பாகச் சுற்றி வலிக்கும்போது அந்த மந்தரகிரி கடலில் மூழ்க அதைக்கண்டு தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக்கொள்ள அவர்வந்து ஆமையாகி மந்தரகிரி தன்முதுகில் நிற்கும்படித் தாங்கினார். இதனால் மமதை அடைய அவரின் மமதையை அடக்கும் பொருட்டு ஈசன் விநாயகரை அனுப்பிவைத்தார்.
விநாயகர்போய்த் தம்முடைய துதிக்கையை நீட்டிக் கடல் நீரையெல்லாம் உறிஞ்சுகையில் ஆமையும் அந்தத் துதிக்கைக்குள் போய் விட்டது. பின்பு விநாயகர் நீரைச் சிந்தினார்.
அந்த நீருடன் ஆமையும் வெளிவந்து விழுந்துக் கிடக்க, விநாயகர் அதன் ஓட்டினைத் தன்னுடைய தந்தத்தினால் பெயர்த்துக் கொண்டுவந்து சுவாமிக்குக் காணிக்கையாகக் கொடுக்க தேவர்கள் வேண்டுதலினால் தலை மாலையுடன் அந்த ஆமையோட்டையும் மார்பில் தரித்துக் கொண்டருளினார்.
ரணியாட்சன் என்னும் அசுரன் பிரம்மதேவனை நோக்கித் தவஞ்செய்து வரம் பெற்று பூமியைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான். அதையறிந்து விஷ்ணு வராக அவதாரஞ்செய்து அவனைக்கொன்று பின் மமதை அடைய பரமசிவன் சுப்பிரமணியரையனுப்ப அவர் அந்த பன்றியின் தலையை வேலினால் குத்தி அமுக்கி அதன் கொம்பினைப் பறித்துக்கொண்டு வந்து சுவாமியினிடத்தில் வைக்க அதை முன்போலத் தரித்துக்கொண்டார்.
விஷ்ணு வாமனாவதாரத்தில் விஸ்வரூபம் கொண்டபோது மமதையடைந்து உலகினையழிக்க முயலுகையில் சிவபெருமான் வைரவரையனுப்ப, அவரந்த விஸ்வரூபத்தைச் சம்ஹாரம் செய்து அதன் வீணாதண்டத்தைக் கொண்டுவந்து எம்பெருமானிடத்தில் வைக்க, சுவாமி அதனைத் தனக்கு ஒரு கோலாக வைத்துக்கொண்டார்.
இரணியனைக் கொல்லவந்த விஷ்ணு நரசிம்மாவதாரம் செய்து அவனைக்கொன்று மமதையடைய, சிவபெருமான் சரபேஸ்வரர் ரூபமெடுத்து அச்சிம்மத்தின் தலையைப்பிளந்துக் கொன்றனர். தேவர்களதன் தோலைக் கொண்டு சிம்மாசனம் செய்து சுவாமியை வேண்டிக்கொள்ள அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
தேவர்கள் அமிர்த முண்டாவதற்காகப் பாற்கடல் கடைந்தபோது ஆலகாலவிஷமுண்டாயது. அதைக் கண்டு தேவர்கள் முறையிட அவர்களை காக்கும் பொருட்டு விஷத்தைக் கண்டத்தில் வைத்தருளினார். இந்தக் காரணத்தினால் காளகண்டன், கறைமிடற்றன், நீலகண்டன் எனப்பெயர்பெறுவர்.
குரண்டாசுரனென்னும் அசுரன் கொக்கு ரூபமாயிருந்து, தேவர்களை துன்புறுத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது கொக்கு இறகை அணிந்து கொண்டார்.
பிரம்மா அகந்தைகொண்டிருக்க அதை யடக்கும் பொருட்டு அவருக்கிருந்த ஐந்து தலையில் நடுத்தலையைக்கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல் பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராயது. பரமசிவன் சிரமாலை யணிந்திருப்பதனால் சிரமாலியென்றும்
கபாலந்தரித்துக்கொண்டிருப்பதனால் கபாலியென்றும் பெயருண்டானது.
அரக்கர்களை அழிக்க விஷ்ணு, அவதாரங்கள் எடுத்து அந்த செயல் முடித்த பின் அந்த அவதாரங்களின் உக்கிரத்தால் யாருக்கும் தீங்கு வரக்கூடாது என்பதற்காக தான் அந்த அவதாரங்களின் எலும்புகளையும் சிரங்களையும் மாலையாக அணிந்தருளினார். அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்று தரித்துக் கொண்டதே அன்றி பெருமை பாராட்டுக்காகத் தரித்துக்கொண்டது அல்ல.
கந்த சஷ்டி விரதம், மகிமைகள்
கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.
செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர்.
தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.
இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து,காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.
பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.
முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.
சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.
முருகா!
மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம்.
கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.
கந்த விரத மகிமை
முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.
கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை
ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்த்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.
ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிக்க வேண்டும் . சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை
இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனைஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.
ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது. அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்பெருங் கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறைமுதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது. கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையார் வழங்குவார்.
சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான்
ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும் கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல் இதுவாகும்.
அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை ஆறு உட்பகைகள் : அவா, கோபம், மயக்கம், கஞ்சத்தனம், செருக்கு, பொறாமை
(காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது.ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும்.
ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சந்நிதி, கதிரமலை(கதிர்காமம்), மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.
கந்தசஷ்டி விரதத்தின் பலன்
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.
கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.
அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.
ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது. கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.
அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும். கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள். கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.
நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.
சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.
மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு. அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.
இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம். சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.
வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தைஎப்படிக் கடைபிடிப்பது?
கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறு நாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும்.
சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்குவிபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டிகவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகாசரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச்சொல்லுங்கள். முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர்.முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பதுநன்மை தரும்.நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.
அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர் நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்த பின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு. வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.
சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !
ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன். அவனது மந்திரம் ஆறெழுத்து – நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரதநாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் எனஇப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறைஅல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்குநாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப்பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம்பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன்என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்த ஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.
சரவணபவ தத்துவம்
சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோ முக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.
உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்ததினம் வைகாசி மாத – விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறு உருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).
மு – முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு – ருத்ரன் என்கிற சிவன்
க – கமலத்தில் உதித்த பிரம்மன்.
ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.
ஆறுமுகமான – சண்முக தத்துவம் என்ன ?
ஒரு முகம் – மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் – அக்னிக்கு,
மூன்று முகம் – தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் – பிரம்மனுக்கு,
ஐந்து முகம் – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் – கந்தனுக்கு.
நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறுகூறுவார் :
உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.
ஸரவணபவ – என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6எழுத்துகள்). இதன் மகிமை என்ன?
ஸ – லக்ஷ்மிகடாக்ஷம்
ர – ஸரஸ்வதி கடாக்ஷம்
வ – போகம் – மோக்ஷம்
ண – சத்ருஜயம்
ப – ம்ருத்யுஜயம்
வ – நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.
ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாகவிளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் – மூலாதாரம்
திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம்
பழனி – மணிபூரகம்
சுவாமிமலை – அனாஹதம்
திருத்தணிகை – விசுத்தி
பழமுதிர்சோலை – ஆக்ஞை.
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்தஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின்சூரனை இரு கூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.
ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடிவிடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப் பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.
அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.
Subscribe to:
Posts (Atom)